Monday, November 22, 2010

நரைக்கா நட்பு!!

"பயணிகளின் பணிவான கவனத்திற்கு" என்று ஒலிப்பெருக்கி அலறிக்கொண்டிருக்க, சின்னஞ்சிறு முத்துதூரலை தூவி தன் வருகையை பதிவு செய்தது தென்மேற்குப் பருவக்காற்று. புகைவண்டியின் வருகையை எதிர்பார்த்துக்காத்திருக்கும் பயணிகள், உணவு பதார்த்தங்களை அவசரமாய் விற்றுக்கொண்டிருக்கும் வியாபாரிகள் என்று அச்சூழல் சற்று பரபரப்பாய் இருந்தாலும் அவையாவும் செல்லையாவை சிறிதும் சலனமடையச் செய்யவில்லை. அங்கிருந்த ஒருசுவற்றின் அருகே அவரது உடல் அமைதியாய் அமர்ந்திருந்தாலும் மனமனைத்தும் குழப்பம்,பதற்றம். கண்களில் நீர் பெருகத் தயாரானது. அக்கண்ணீருக்கு கைகளால் அணைபோட்டு அதன் சுவடுகளை அழித்துக்கொண்டிருந்தார். சுற்றும், முற்றும் தூய்மையான குளிர்க்காற்று சுகமளித்தாலும், செல்லையாவுக்கு அது ஒரு மெல்லிய நடுக்கத்தையே ஏற்படுத்தியது. அவரது உள்ளங்கையில் இன்னும் வியர்வையின் பிசுபிசுப்பு. அருகில் அவருக்குத் துணையாக ஒரு நன்றியுள்ள ஜீவன். செல்லையாவுக்கு ஆறுதல் சொல்ல புலனில்லாமல் மனதிற்குள் தனது தாய்மொழியில் புலம்பிகொண்டிருந்தது. தூய்மையான தூறல் அடை மழையானது. மழைக்கு ஓர் தனிச்சிறப்புண்டு. நாம் ஆனந்த மனநிலையில் அதனை அணுகினால் பேரானந்தத்தை அளிக்கும். மனக்குழப்பத்தோடு சென்றால் அது துன்பக்கடலில் திளைக்கச்செய்யும். செல்லையாவுக்கு அன்று மழையின் இரண்டாம் பண்பு பரிசாக அளிக்கப்பட்டது.
அருகில் நின்று கொண்டிருந்த நாய் திடீரென்று இடப்பக்கம் நோக்கி ஓடியது. அது ஓடிய திசையில் செல்லையா நோக்க தூரத்தில் ராமசாமி கையில் குடையுடன் நடந்துவந்து கொண்டிருப்பது கண்ணீர் திவளைகளின் வழியாக பிரிந்து தெரிந்தது. கண்களின் நீரினை வலக்கை தனது ரேகை பள்ளங்களில் புதைத்தார் செல்லையா. "என்னடா ! இன்னைக்கு ரெண்டு பெரும் சீக்கிரமே வந்துடீங்க போல ?" என்று நாயிடம் பேசிக்கொண்டே வந்தார் ராமசாமி. அது தனது வாலினை ஆட்டிக்கொண்டே அவரது காலடியினைப் பின்பற்றி வந்துகொண்டிருந்தது . "செல்லையா! இந்த மழைக்கு நீ இன்னைக்கு வாக்கிங் வரமாட்டேனு நெனச்சேன் , ஒரு முக்கியமான விஷயம்னு வரசொன்னே! என்ன சமாசாரம் ?" என்றார் ராமசாமி. செல்லையா பதிலேதும் கூறாமல் தொண்டை வரைக்கும் வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். " செல்லையா ! என்ன ரொம்ப பதட்டமா இருக்கிறே? எதாச்சும் உடம்பு சரியில்லையா ? கையெல்லாம் வேற நடுங்குது ! என்னபா ஆச்சி ?" என்று மீண்டும் வினவினார் ராமசாமி. மெதுவாய் தலையை உயர்த்தி செல்லையா ராமசாமியை நோக்கினார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை என்பதை அவருடைய சிவந்த கண்களும், அதன் கீழிருந்த கருவளையங்களும் சொல்லாமல் சொல்லின. ராமசாமி செல்லையாவின் வார்த்தைகளை வரவேற்கத் தயாரானார். செல்லையா வார்த்தை ஒவ்வொன்றாய் உதிர்த்தார்.
"ராமசாமி ! வாழ்க்கையில ஒரு பயலையும் நம்பி வாழகூடாதுயா ! மனுசங்கமேல இருந்த கொஞ்சநெஞ்ச நம்பிக்கையும் போயிருச்சி !" என்று கதறினார்.

" என்ன ஆயுடுச்சியா இப்போ ! அழாம சொல்லு. வியாக்கியானத்த விட்டுட்டு விஷயத்த சொல்லு" என்றார் ராமசாமி.

"நெத்தி ராவுல என் பையன் எங்கிட்ட தனியா பேசணும்னு சொல்லிக் கூப்பிட்டான் ராமசாமி" "ஹ்ம்ம் ! அப்புறம் " என்றார் ராமசாமி.

"அவனும் அவன் பொண்டாட்டியும் பிள்ளைங்க படிப்பு விஷயமா மெட்ராஸ்ல போய் இருக்கப்போறான்கலாம்" என்று நிறுத்தினார்.

" செல்லையா ! அதுக்கு என்னப்பா தனியா இருக்கக் கவலைப்படுறயா? நான் கடந்த மூணுவருசமா தனியாதான் இருக்கிறேன்.அதெல்லாம் பழகிடும். என் பையன் ஆறுமாசத்துக்கு ஒரு தடவ வந்து பார்த்துட்டு போவான். அதெல்லாம் அப்படிதான்யா அவனுக்கும் ஆயிரம் சோலி இருக்குமா இல்லையா ?" என்று சொல்லிக்கொண்டே தனது பைக்குள் இருந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசினார். அது ஒரே வாயில் இரண்டையும் உள்ளே தள்ளிவிட்டு மீண்டும் ராமசாமியின் கையையும் கண்ணையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தது. மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு ஆரம்பித்தார் செல்லையா.

"தனியா இருக்கிறது எனக்கொண்ணும் புதுசில்ல ராமசாமி. உண்மைய சொல்லப்போனா என் பொண்டாட்டி செத்துப் போய் கடந்த 15 வருஷமா நான் தனியா வாழறதா நெனச்சிக்கிட்டு இருக்கிறேன்.அவ போனதுக்கு அப்புறம் என் புள்ள ஒருத்தனுக்ககாதான் வாழ்ந்துகிட்டு இருந்தேன். அதுக்காக அவன்கிட்ட நான் காசு,பணம் எதிர்ப்பார்க்கல, கொறைஞ்சபட்ச நன்றி எதிர்ப்பாகுறது தப்பாயா?"என்று குமுறினார்.

"பொறுமை செல்லையா! பிரச்சனைய முழுசா சொல்லு !" என்றார் ராமசாமி.

"பயபுள்ள ! என்ன போய் முதியோர் இல்லத்தில தங்கச் சொல்றான்யா " என்று கதறி ராமசாமியின் கைகளைப் இறுகபபற்றினார். அப்பற்றுதலில் செல்லையாவின் தனிமை உணர்வும், பாதுகாப்பற்ற நிலையும் ராமசாமி உணர்ந்தார். செல்லையாவை முழுமையாகப் பேசவிட்டு குறுக்கிடாமல் அமைதி காத்தார் ராமசாமி.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு " இது வெகுநாளா அவனும், அவன் பொண்டாட்டியும் போட்ட திட்டம் போல இருக்கு ராமு ! திடுதிப்புனு அந்த முதியோர் இல்லத்து பாரம் எல்லா நிரப்பிகிட்டு எங்கிட்டவந்து கையெழுத்து போடுங்கிறான்யா! தகப்பன்கிற ஈவு, இரக்கம்கூட இல்லாத அவனும் ஒரு மனுசப்பயலா ?" என்றார் சோகம் கலந்த கோபத்துடன்.

ராமசாமிக்கு அதிர்ச்சி கலந்த வருத்தம். ஆறுதலின் மூலம் செல்லையாவை அமைத்திப்படுத்த முயன்றார் ராமசாமி. "செல்லையா ! உன் பையன் இப்படி பண்ணுவான்னு நெனைகல. நான் வேணும்னா அவன்கிட்ட பேசி பார்க்கட்டுமா ? என்று கேட்க , "வேண்டாம் செல்லையா ! அவன் பாரம் நிரப்பிகிட்டு வந்து கையெழுத்து கேக்கும்போதே தெரியலையா அவன் சேதி சொல்லவந்து இருக்கிறானே தவிர அனுமதி கேக்கவரல! அவன் சொன்னத கேட்ட எனக்கு மூளை ஒரு நிமிஷம் வேல செய்யாம போச்சி ! அவன்கிட்ட அந்த நேரத்துல அவன்கிட்ட பதில்சொல்லனுமா இல்ல கேள்வி கேக்கனுமாகிற அடிப்படை கூட என் மூளையில இருந்து அழிஞ்சிபோச்சி. அவன் எக்கேடு கேட்டு போனாலும் பரவாயில்ல ஆனா என் பேரப்பிள்ளை அவன பார்க்கமுடியாம போயிரும் ராமு" என்று பாசக்கண்ணீரைக் கொட்டினார்.

"பொறு செல்லையா ! ஆத்திரத்துல வார்த்தைய அலையா கொட்டாதே ! என்ன செய்யலாம்னு யோசிப்போம் " என்றார் ராமசாமி.

"இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணும் இல்ல ராமு ! நான் முடிவு பண்ணிட்டேன் " என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே செல்லையாவின் கைபேசி அழைத்தது.அதில் அவரின் மகனின் பெயர். " ஆங்! சொல்லுப்பா!" என்றார் செல்லையா பவ்யமாக. "ஆமாப்பா இங்கதான் ரயில்வே கிட்ட இருக்கிறேன் இன்னும் அரைமணி நேரத்துல வந்துருவேன். வந்து கையெழுத்து போடுறேன்" என்று குரல் நடுங்க சொல்லி பேச்சு வார்த்தையை முடித்தார்.

"வயிறையும், உயிரையும் வளர்க்க நாம நம்மளயே இழந்து இந்த தள்ளாத வயசுல அடுத்தவன் கைய நம்பி இருக்கிறதால தான் இந்த பிரச்னை, கேவலம் எல்லாம். நீ கொடுத்துவச்சவன் ராமு. உன் புள்ள உன்ன நல்ல பாத்துக்கிறான். ஆனா கொஞ்சம் கவனமா இரு. எனக்கு நேரமாச்சி! உன்ன அடுத்தது எப்ப பாக்கப்போறனு தெரியாது. அந்த இல்லம் கொஞ்சம் தூரமா இருக்கும்னு சொன்னான். நான் செல்போனும் கொண்டு போகப் போறதில்ல. முடிஞ்சா வாரத்துக்கு ஒரு லெட்டர் போடு. நீ எழுதலைனாலும் நான் எழுதுவேன். எனக்கு வேற வேலை ஒண்ணும் பெருசா அங்க இருக்காது" என்று சிறிது அமைதிகாத்தார் துக்கத்துடன்.

அமைதி ! ஆழ்ந்த அமைதி ! சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நீர்நிலையில் ஒரு சிறு கல்வீசினால் சிறிது அதிர்வடைந்து , அக்கலினை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் அதே அமைதியுடன் பயணத்தைத் தொடரும் நீரினைப் போன்று பொறுமை நிலையினை அடைந்தார் செல்லையா. "ராமசாமி ! நான் கிளம்புறேன் இந்த நாயை எனக்காகவும் சேர்த்து பார்த்துக்கோ ! நான் போறேன் " என்று வாக்கியத்தை முடித்தும் முடிக்காமலும் தனது ஊன்றுகோலினை எடுத்துக்கொண்டு மெதுவாய் நடந்தார். ராமசாமி ஒன்றும் செய்ய இயலாதவராய் வாயடைத்து செல்லையாவை பார்த்துக்கொண்டிருந்தார். செல்லையாவின் உடலின் தளர்ச்சி நடையிலும் , மனதின் தளர்ச்சி நடையின் வேகத்திலும் தெளிவாய் தெரிந்தது. இருவருக்கும் நடுவில் அந்த நாயும் தூரலில் நனைத்தவாறே செல்லையாவுக்கு விடைகொடுத்தது.

இளமையில் வறுமை , தனிமை இரண்டும் கொடுமையிலும் கொடுமை. ஆனால் முதுமையில் அவை ஒருவரை நடைபிணமாய் உலவ வைக்கும் ஒரு சித்ரவதை. பிறவியிலே பார்வையற்றவனை விட இடையில் பார்வை இழந்தவன் பெரிதும் பாதிக்கபடுவதைபோல முதியவர்களின் தனிமை பலகாலம், பலவாறாய் பேசித் திரிந்தவனை ஊமையாய் வாழ வற்புறுத்தும் அடக்குமுறை.



மாதங்கள் கடந்தன. இருவரும் தங்களது தனிமைச் சிக்கலுக்கு கடிதங்கள் மூலம் கொஞ்ச கொஞ்சமாய் சிக்கெடுத்துக் கொண்டிருந்தனர் . ஆனால் கடந்த மூன்று வாரங்களாய் செல்லையா அனுப்பிய கடிதங்களுக்கு ராமசாமியிடம் இருந்து பதில் வரவில்லை. மூன்று வாரங்களில் ஐந்துமுறை தொலைப்பேசியில் அழைத்தும் பார்த்தார். யாரும் எடுக்கவில்லை. " என்ன ஆயிற்று ராமுவுக்கு ?" என்று மீண்டும் மீண்டும் தன்னுள் புலம்பிக்கொண்டிருந்தார். அவருடைய அன்றாட வேலைகள் பெரிதும் தடைபட்டன. பொதுவாக ராமசாமியிடமிருந்து ஒவ்வொரு புதன்கிழமையும் கடிதம் வருவது வழக்கம். அடுத்த புதன்கிழமைக்காக ஆவலோடு காத்திருந்தார். ஆனால் இவ்வாரம் செவ்வாய்கிழமை அன்றே தபால்க்காரரின் ஸ்கூட்டர் ஒலி. அறையில் இருந்து ஒரு வித பதட்டத்துடன் ஓடோடி வந்தார் அவரால் முடிந்த வேகத்தில். கடிதத்தை கண்டார் பரவசத்தோடு. பிரித்துப்படிக்க தொடங்கினார்.
"அன்புள்ள செல்லையாவுக்கு,
"என்னப்பா ! நல்ல இருக்கியா ! மன்னிச்சுக்கோ கொஞ்ச அவசர வேலையா மகனை பாக்க பெங்களூர் போயிருந்தேன். அதனால உனக்கு லெட்டர் போட முடியல. அப்புறம் எப்படி இருக்கிற ? மூட்டு வலி எப்படி இருக்குது ? அங்க சாப்பாடு சவுரியம்ல எப்படி ? வேலையெல்லாம் சுலபம் தானே ? அப்பப்போ வெளியிலே சுற்ற விடுவாங்களா ? என்னடா இவன் இல்லத்தைப் பற்றி கேள்வி மேல் கேள்வி கேக்குறன்னு யோசிகிறையா ? விஷயம் இருக்கு . இன்னும் இரண்டு வாரத்துல நானும் அங்க நிரந்தரமா வந்துடுறேன் செல்லையா. கோபப்படாதே ! இது நல்ல யோசிச்சி எடுத்த முடிவு தான். என் பையனுக்கு இதுல விருப்பம் இல்ல. அப்புறம் நான் பெங்களூர்கு போய் விஷயத்தை சொன்னதும் அவன் புரிஞ்சிகிட்டான். இது நான் எனக்காக எடுத்துகிட்ட முடிவு . இப்போதெல்லாம் தனியா இருக்க முடியறது இல்ல :-). என் பையன் கூட உன்னையும் என் வீட்டிலயே வச்சிக்க வேண்டியது தானேன்னு கேட்டான் . ஆனா உன்ன பத்தி எனக்கு நல்ல தெரியும். அதனால அதையும் சொன்னேன். இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு செல்லையா. இனி மேல் நாம ரெண்டு பெரும் தனிமரம் இல்ல. அப்புறம் வரும் போது நம்ம "நாயையும்" கூட்டிட்டு வரலாம்னு ஒரு நெனப்பு .என்ன சொல்றே ? மற்றபடி இப்போதைக்கு தயாராகுறதுக்கு உண்டான வேலையில இருக்கிறேன். இன்னும் 12 நாட்களில் உன்னை சந்திக்கிறேன்.
இப்படிக்கு ,
ராமு.
என்று முடித்திருந்தார். கடிதத்தின் கடைசி வரியினை வாசித்து முடிக்கும் போது செல்லையாவின் கண்களில் ஆனந்தமும்,வருத்தமும் கலந்த இரண்டு நீர் துளிகள் காகிதத்தில் வீழ்ந்து கரைந்து படர்ந்தது. பரவசத்துடன் வானம் நோக்கி அண்ணார்ந்து பார்த்தார் எங்கோ தூரத்தில் ஒரு ரயில் நிலையத்தில் இரு முதியவர்கள் அமர்ந்துகொண்டு மெல்லிய தூரல்களின் நடுவே தண்ணீர் அருந்திகொண்டிருக்க அருகே ஒரு நாய் பொறுமையை ஒரு பிஸ்கட்டினை சுவைத்துவிட்டு இருப்பது செல்லையாவின் கண்நீர்த்திவளைகளில் புகுந்து மனக்கண்களில் தெரிந்தது. Download As PDF

Sunday, September 5, 2010

நானும் !! நானும் !!

தண்ணீர் குழாய் குமுறுகிறது. "காசநோய் " கண்டிப்பாக இக்குழாயிக்குக் காசநோய் தான். பூமித் தாயின் குருதியினை முடிந்தமட்டும் உறிஞ்சி என் கைகளில் பீச்சியடிக்கிறது. குழாய் நீர் விரயமாகிக்கொண்டிருகிறது. காலைச் சூரியனின் ஓளி ஜன்னல் வழியாக என் நெற்றியினை பதம்பார்கிறது.அரைத் தூக்கத்தில் பல்துலக்கியை தேடி எனது விரல்கள் ஜன்னலில் விளையாடுகின்றன. கண்டுபிடித்த களிப்பில் மறுகை பற்பசையை அழுத்த , அது துலக்கியின் தூரிகையின் மீது பிரமாதமாய்ப் படுத்துக்கொண்டு எனது பல் சிறைகளுக்குள் தஞ்சம் புகுந்தது. என் மூளைக்கு இச்செயல்களில் எள்ளளவும் ஈடுபாடு இல்லை. இன்று மதியம் நடக்கப்போகும் ஒரு விஷயத்தைப் பற்றி மும்மரமாய் எண்ணிக்கொண்டிருந்தது .
"டேய் ! தண்ணீய வீணாக்காதடா !" என்றொரு அறிவுரை என் அருகிலிருந்து. நான் சிறிதும் சலனமற்றவானாய் பல் துலக்குதலில் குறியாய் இருந்தேன். மதியம் நடக்கப்போகும் அந்நிகழ்ச்சி என்னுள் சிறு பதற்றத்தை பற்றவைக்க , அது கைகளில் வாயிலாய் துலக்கியை அடைந்து, அவ்வேகமான துலக்குதலினால் எனது கீழ்த்தாடையின் முன்னிலிருந்து இடப்பக்கம் மூன்றாவது பல்லின் கீழுள்ள எளிரை பதம்பார்த்தது. வலி பொறுக்கமுடியாமல் தண்ணீரை அள்ளி அள்ளி வாயில் நிறைத்தேன். நிறமற்ற நீர் வெளிவரும்போது நீர்ம சிவப்பினை பெற்று சிதறி ஓடியது. "மெல்ல பல்தேய்டா ! எதுக்கு இப்போ பதற்றபடுற ? ஒரு வருஷமா இன்னைக்கு இன்னைக்கு நடக்கும்னு நெனச்சிக்கிட்டு இருந்த ஒரு விஷயம் இன்னைக்கு நடக்கப்போகுது. இதுக்கு தைரியமா இருக்கணுமே தவிர தயக்கமோ , பயமோ தேவையில்லை" என்ற அறிவுரை மீண்டும் பாரபட்சமில்லாமல் பாய்ந்தது. அதனையும் பொருட்படுத்தவில்லை. பொதுவாக அறிவுரை கூறுபவர்கள் மற்றவரின் பதற்றத்தையும் , பயத்தையும் முழுமையாக உணர்வதில்லை. கடலின் நடவே சிக்கியவனுக்கு கரையில் நிற்பவன் நீந்தக் கற்றுக்கொடுக்க இயலாது. எனது வாழ்நாளின் பெருவாரியான நாட்களை தனிமையின் துணையுடன் கழித்தவன்.

பள்ளி ,கல்லூரி நாட்களில் அனைவருக்கும் நண்பர்கள் வட்டம் இருந்திருக்கும். எனக்கு அமைந்த வட்டத்தின் விட்டமோ ஒரு சுழியம். அது ஒரு புள்ளி . சிறு புள்ளி. யாருடனும் பேசி,சிரித்து பழகியதில்லை. இதனாலேயே எனக்கு வாய்த்தது அந்த பெண்ணின் நட்பு. அனாவசியாமாக சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களுக்கு மத்தியில் , அவளுக்கேன்னவோ அளவுக்குக் கூடபேசாத என்னைப் பிடித்திருந்தது என்றாள். இரண்டு வருட நட்புக்காலம். முதல் வருட முடிவிலேயே எனது முடிவு மாறியிருந்தது . காதல் மலர்ந்திருந்தது. அவளுடனே வாழ்நாள் முழுவதும் வாழவேண்டும் என்ற உந்துதல் என்னுள் ஆழமாக வளர ஆரம்பித்தது. ஒரு வருட காலம் நான் நினைத்து நினைத்து சேர்த்த எண்ணக் குவியல் இன்று மதியம் அவள் முன் உடைக்கப்பட போகிறது . இத்தனை எண்ணங்கள் மனதில் ஓடி முடித்திருந்த தருவாயில் நான் குளித்து முடித்திருந்தேன். "டேய் ! சட்டையை அயன் பண்ணி போடலையா ? எவளோ சுருக்கம் இருக்கு பாரு " என்றொரு அதட்டல். சட்டை சுருக்கங்கள் எப்பவுமே எனக்கு ஒரு அரவணைப்பை கொடுப்பதை உணர்வதால் அதனை ஒரு இரும்புத் தேய்ப்பின் மூலம் இழக்க விரும்பாதவன் நான், அதனால் அதட்டலை அலட்சியம் செய்தேன். ஆடையை அணிந்து கொண்டேன்.

கண்ணாடி முன்னிற்க்கையில் ஒரு வார தாடி என்னை ஓரக்கண்ணால் பார்த்து "கவனிப்பாயா?" என்றவாறு தொக்கிநின்றது. அதனையும் நான் சட்டைசெய்வதாய் இல்லை . " ஒரே எண்ணம் ! ஒரே வாக்கியம் ! ஒரே முடிவு !" இன்று தெரிந்தாகவேண்டும் . ஆனால் இதே போன்று இதற்குமுன் தன்னிடம் வந்து காதலைச் சொன்ன ஒரு ஆணைத் தாறுமாறாக திட்டியதாகவும் , அவனும் நண்பன் என்ற பதவியில் இருந்து , காதலன் என்ற பதவிக்கு ஆசைப்பட்டதாகவும் , அந்த விஷயம் கல்லூரி முதல்வர் வரை போனதாகவும் கூறியிருக்கிறாள். அதே ஆசையுடன் நானும் செல்கிறேன். கண்டிப்பாக எதிர்மறை தான் பதில். தெளிவாகத் தெரிந்தும் அச்செயலை செய்யத் துணிந்தேன். வீட்டினில் மின்விசிறி சுழலும் சப்தம் மட்டுமே கேட்டுக்கொண்டு இருந்தது . மற்றவை அனைத்தும் நிசப்தம் என் எண்ணங்கள் உட்பட.எனது கால்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல தயங்கின. "வேண்டாம்" என்பது தான் அவளுடைய பதிலாக இருக்கப்போகிறது. அறை விழாமல் திரும்பினால் அது எனது அம்மையப்பன் செய்த புண்ணியம் தான்" என்று எனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தேன் . "டேய் ! தைரியமா போவோம்.நானும் இருக்கிறேன்ல ! கண்டிப்பா அவ ஒத்துக்கொள்வா" என்ற ஆறுதல் வார்த்தை எனக்கு சிறிது மகிழ்ச்சி அளித்தது. வீட்டைவிட்டு வெளியேறினோம்.
பாடவேளைகள் கடந்து கொண்டிருந்தன. நான் பாடங்களை விட்டு வெகுதொலைவில் எண்ணச்சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தேன். மதிய உணவு இடைவேளையின் போது எப்படியாவது இதை கொடுத்து விடவேண்டியது தான் . இன்னும் அரைமணி நேரம் தான் இருக்கிறது என்று எண்ணிக் கொண்டு என்னிடம் இருந்த அவளுடைய ஒரு புத்தகத்தில் நான் வைத்திருந்த நானே தயார்செய்த வாழ்த்து அட்டையை எடுத்துப் பார்த்தேன் . அது ஒரு வெள்ளைத் தாள் . அதில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தது ஒற்றை வாக்கியம். இரண்டே வார்த்தைகள். எனது வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடிய அந்த இரண்டு வார்த்தைகள்: "உன்னை காதலிக்கிறேன். ". இந்த இரண்டாம் "கா" வார்த்தையை முழுசாக எழுதிமுடித்து முற்றுப் புள்ளி வைக்க எனக்கு சரியாக 13 நிமிடங்கள் ஆகிற்று. யோசனை ... மீண்டும் பலத்த யோசனை. எந்திர மணி ஒலித்து எனது சிந்தனை சிறையினை உடைத்து என்னை தற்காலத்திற்கு இழுத்து வந்தது. மதிய உணவு வேளை. நேரம் கூடிவந்து விட்டது. கொடுத்துவிட வேண்டியது தான்.

போலி தைரியத்தை முழுமையாக மூளையில் ஏற்றிக்கொண்டு நடந்தோம். கல்லூரியின் உணவருந்தும் அறையில் அவள் தனது சகாக்களுடன் உணவு உண்டுகொண்டிருந்தாள். அவர்களின் அருகில் சென்று அழைக்க சற்று கூச்சமாய் இருந்தது . நின்ற இடத்தில இருந்து அவளை நோக்கி செய்கை செய்து " ஒரு நிமிடம் " என்றேன். அவளும் தனது ஸ்பூனினை வைத்து விட்டு வந்தாள். அவளை அழைத்துக் கொண்டு வெளியே ஒரு மரத்தினடியில் சென்றேன். " என்ன விஷயம்டா ? ரொம்ப டல்லா இருக்கிற ? " என்றாள். எனக்கோ அவள் முகம் பார்த்து பேசுவது முடியாத காரியமானது. கீழே தலைகுனிந்து தரையை பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தேன். அவள் ஏதேதோ சொல்லிகொண்டிருந்தாள். " டேய் ! அவ உன் கிட்ட பேசிகிட்டே இருக்கிறா .. கொஞ்சமாவது respond பண்ணு ! என்றது குரல். நானோ உழைத்துப் பெற்ற உணவினை சுமந்து ஊர்ந்து சென்றுகொண்டிருந்த ஒரு எறும்பினைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏதோ எண்ணம் திடீரென்று உந்தித்தள்ள , சற்றென்று அவள் கண்களை நோக்கினேன். " குடு டா ! கையில வச்சிருகிறத குடுத்திரு டா ...! தாமதிக்காதே ! " அவரசரப்படுத்தியது குரல். "மன்னித்துவிடு நான் செய்யுறது தப்புன்னு நெனச்சனா ?" என்று கூறிவிட்டு அவளிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வேகமாய்த் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.

கண்டிப்பாக இந்த பித்தனின் பேச்சும் , செய்கைகளும் அவளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கக் கூடும். புத்தகத்தினுள் திறந்து பார்த்தால், அது அவளுக்கு கோபத்தை ஏற்படுத்துமேயானால்......! என்னால் அதன்பிறகு நடக்கபோவதை நினைத்துகூடபார்க்கமுடியாது. " பண்ணனும்னு நெனச்சத பண்ணியாச்சி ! விடு பாத்துக்குவோம் " என்றது குரல். எதுவுமே புரியவில்லை. யார் பேச்சையும் கேட்கத் தயாரில்லை. மதியம் வகுப்பில் அவளை எதிர்கொள்ள எனக்கு துணிவில்லை. விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றேன். காலையும், மதியமும் உண்ணாத காரணத்தால் கடும் தலைவலி. வெளியே சென்று நன்றாக உண்டுவிட்டு ஒரு ஆழ்ந்த தூக்கம் போட்டால் சரியாகிவிடும் என்று எண்ணிக் கொண்டு , உணவருந்தி படுத்தால் மீண்டும் படபடப்பு என்னை வாட்டியது. தூக்கத்தை இழந்து, குழப்பங்களை மட்டுமே எனது எண்ணங்கள் சுமந்து கொண்டிருந்தது. சில மணிநேரம் கழித்து என்னை அறியாமல் தூங்கிவிட்டேன்.

மறுநாள் காலை. எப்போதும் கடைசியாக வகுப்பிற்கு செல்லும் நான் , இன்று முதலில் சென்று மூன்றாம் பெஞ்சினை ஆக்கிரமித்துக் கொண்டேன். பதற்றம் ஆழ்ந்த பதற்றம் என்னை ஆட்கொண்டது. லாட்டரியை ஆர்வமாக சுரண்டுபவனின் பதற்றம். தேர்வு எழுதிவிட்டு முடிவுக்கு காத்திருக்கும் ஒரு மாணவனின் பதற்றம். அதுவும் காதல் தேர்வு. ஒவ்வொரு மாணவர்களாக வகுப்பை மெல்ல மெல்ல நிறைத்தார்கள் . அவளைத் தவிர. அவள் வராதது எனது இதயத் துடிப்பை எகிறச் செய்தது. தப்பு செய்துவிட்டேனோ ? எதற்காக அவள் வரவில்லை ? காரணம் நானா ? நான் கொடுத்த கடிதமா ? அவளது விடுப்பு எனது தோல்வியை உறுதி செய்தது. இம்முறை என் அருகே ஆறுதல் குரலும் இல்லை . அதுவும் சோர்ந்து போயிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது. முதல் இரண்டு பெஞ்சினில் இருக்கும் அவளின் தோழிகள் என்னை மீண்டும் மீண்டும் முறைத்துப் பார்த்துக்கொண்டே இருந்தார்கள். விஷயம் ஊர்ஜிதம். அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அவர்களின் பார்வை என்னை சித்ரவதை செய்தது.முடிந்தமட்டும் அவர்கள் பக்கம் திரும்பாமல் பாடவேளைகளை கடத்தினேன்.

மீண்டும் மதியவேளை. முந்தியடித்துக் கொண்டு வகுப்பின் வெளியே சென்றேன். என்னை அழைத்தது ஒரு பெண்குரல். நின்றது அவளின் தோழி. என்னை அவள் நூலகத்தின் அருகே வரச் சொன்னதாகக் கூறிவிட்டுச் சென்றாள். நூலகத்தை நோக்கி ஓடினேன். "டேய் ! மெதுவா போ " என்றது குரல். இதனையும் நான் பொருட்படுத்தாது ஓடினேன். நல்லதோ ? கெட்டதோ? ஏதோ ஒரு முடிவு தெரிந்தாகவேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் ஓடினேன். அங்கே அவள் நிற்பதைக் கண்டதும் எனது ஓட்டம் நடையானது. அருகில் சென்று "சாரி ! அவசரப்பட்டு" என்று பேச ஆரம்பித்தேன். அவள் "நிறுத்து " என்றவாறு சைகை காட்டினாள். நேற்று நான் கொடுத்த அதே புத்தகத்தை என் கையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள். எனது மனதின் நடுக்கம் கைகளில் தெரிந்தது. "திறந்து பாரு ! பாரு டா! " உந்தித் தள்ளியது குரல். எனக்கு மனதில் வலுவில்லை. திறந்தேன் மெதுவாக . நான் கொடுத்த அதே காகிதம்.

அவள் முடிவினை சொல்லிவிட்டாள். எதிர்பார்த்த எதிர்மறை பதிலை அவளின் செயல்களின் மூலம் கூறிவிட்டாள். கண்களில் நீர் வெளிவர தயாரானது. மனமுடைந்து மறுபடியும் திறந்து காகிதைப் பார்த்தேன். நான் எழுதிய இரண்டு வார்த்தைகளுடன் கீழ ஓரத்தில் ஒரு அம்புக்குறி. சிறிது உற்சாகம். காகிதத்தை திருப்பிபார்தேன் அதில் "நானும்" என்ற ஒற்றை வார்த்தை. பார்த்ததும் பரவசம். மகிழ்ச்சியின் உச்சம். கனவா ? நனவா? அரை நொடிக்குள் ஆயிரம் கேள்விகள். இப்படியும் கூட எனக்கு நடக்குமா?. ஒற்றை வார்த்தையில் நான் எழுதிய இரண்டு வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்தாள். "எப்படி டா நான் சொன்னது நடந்துச்சா?" என்று சொன்னது குரல். "தேங்க்ஸ்! " என்றேன் .மனநிறைவுடன் வீடுதிரும்பினேன். அன்றிரவு நிம்மதியாக உண்டேன். பலநாள் பதுக்கிவைத்திருந்த தூக்கம் இன்று விடுதலையடைகிறது. "என்னடா ! தம்பி ! கடைசில சந்தோசமா " என்றது மனசாட்சியின் குரல். "ஆமா! நல்ல வேளை நான் நெனச்சது நடக்கவில்லை" என்று மகிழ்ந்தேன். "சில நேரம் நீ நெனகாதது நடக்கிறதும் நல்லதுக்கு தான் . உனக்கு ஒரு துணை கிடைச்சிருச்சி . இனி நீ தனியானவன் இல்ல !" என்றது மனசாட்சி களிப்புடன்.

இங்கு எனக்கு ஒரு ஐயம். நான் நினைத்தது நடக்கவில்லை ! மனசாட்சி சொன்னது நடந்தது ! இந்த தருணத்தில் நானும் என் மனசாட்சியும் வேறு வேறா? " என்ற தர்க்கம் என்னுள். கடும் யோசனைக்கிப்பின் இரண்டும் ஒன்றாக இருந்தாலும் , வேறுவேறாக இருந்தாலும் நானும்,நானும் (மனசாட்சியும்) இருக்கும்வரை என்றுமே நான் தனியானவனில்லை என்பதை உணர்ந்தேன் . ஆழ்ந்த தூக்கத்தோடு ஐக்கியமானேன். Download As PDF

Wednesday, April 21, 2010

"அன்பு"ள்ள ஆசானுக்கு,

                                              500 க்கு 474 ; கணக்கு - 99 ; அறிவியல் - 99 ; என்னடே பயங்கரமான மார்க்கா இருக்கு . நல்ல ஸ்கூல்ல நல்ல தானே படிச்சிட்டு இருக்கிற. அங்க விட்டுட்டு இந்த ஸ்கூல்ல சேரணும்னு ஏன் வந்துருக்கே ?" நமது முதல் சந்திப்பில் நீங்கள் கேட்ட முதல் கேள்வி. " இங்க கோச்சிங் நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன் சார்!" என்றேன். "அப்போ அந்த ஸ்கூல்ல கோச்சிங் நல்லா இருக்காதா ?" என்றீர்கள். "அது இல்ல சார் , இங்க இயற்பியலுக்கு "அன்பு" சார் , வேதியலுக்கு "கண்ணன்" சார்லாம் இருக்காங்க. அவங்க கோச்சிங் செமையா இருக்கும்னு சொன்னாங்க" என்று நீங்கள் தான் அன்பு சார் என்பதை அறியாமல் உங்களிடமே கூறினேன். நீங்களோ அருகில் இருந்த லேப் டெக்னிசியன் முருகன் என்பவரைப் பார்த்து அடக்கத்துடன் புன்னகைத்தீர்கள். அவர் என்னை நோக்கி " தம்பி ! நீ இப்போ அன்பு சார் கிட்டதான் பேசிகிட்டு இருக்கிற " என்று கூறினார். என்னுள் ஒரு வித பதற்றம் . "அப்படியா ! வணக்கம் சார் !" என்றேன். நீங்கள் அமைதிகலந்த புன்னகையுடன் நான் கொடுத்த காகிதங்களில் கையெழுத்து இட்டீர்கள். நான் ஆர்வக்கோளாராக " நான் நல்லாபடிப்பேன் சார் " என்று கூற "இங்க படிப்பைவிட மொதல்ல ஒழுக்கம் தான் முக்கியம்! சரியா !" என்று எனக்கு முதல் போதனை செய்து அனுப்பினீர்கள்
                                         எப்பொழுதும் புன்னகைக்கும் முகம், கூரியபார்வை ,முறையான ஆடை அணிதல், வூட்லண்ட்ஸ் சூ, ஆளைத்தூக்கும் அரேபிய ஸ்சென்ட் நறுமணம், நுனிநாக்கு ஆங்கிலம் இவை அனைத்தும் கொண்ட ஒருவரை நீங்கள் "டி வி டி மேல்நிலைப் பள்ளியில் எதிர்பட நேர்ந்தால் அவர் கண்டிப்பாக எங்களின் "அன்பு" சாராகத்தான் இருப்பார்.
                                      இயற்பியல் பொதுவாக சிறிது இறுக்கமான பாடப்பகுதி தான். அதனை மாணவர்களுக்கு இனிமையான முறையில் கொண்டு சேர்ப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே . "frequency Modulation " என்று கரும்பலகையில் எழுதிவிட்டு இரண்டாம் உலகப்போர் முதல் உள்ளூர் தெரு சண்டை வரை மணிக்கணக்காக கதை சொல்லுவீர்கள். அவை அனைத்தின் அடியிலும் "frequency modulation " என்ற கருத்தே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். அன்பு என்று பெயர் சூட்டிக்கொண்டு அதிரடியை வகுப்பில் நீங்கள் கையாளுவீர்கள். அன்பினை படிப்பிற்கும் , அதிரடியை ஒழுக்கத்திற்கும் நீங்கள் பயன்படுத்தும் முறை மிகவும் ஆக்ரோஷமானது. இரண்டு மாணவர்கள் தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருந்த போது பேனாவை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களது கன்னத்தில் விட்ட அறையில் "சிங்கப்பல் " ஒன்று சிதறி வெளியே விழுந்ததை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை.
                                                 ஒரு முறை உங்களிடம் பதிலுக்கு பதில் வாதாடும் தருணம் வந்தது . நீங்கள் சொல்லும் கருத்தை ஒத்துக்கொள்ளும் மனநிலையில் நான் இல்லை. தலைக்கனத்தோடு பேசிக்கொண்டிருந்தேன். நீங்கள் "அது தவறு " என்று திரும்ப திரும்ப கூறியும் எனது கருத்திலே கர்வத்தோடு நிலைத்து நின்றேன். நீங்கள் அன்று தான் முதல் முறையாக என்னிடம் கோபப்பட்டீர்கள்." என்னடே நீ பெரிய ஆளாடே ! ஸ்டீபன் ஹாகின்ஸ் விட பெரிய ஆளாடே ?" என்றீர்கள் . "அது யாரு சார் "ஸ்டீபன் ஹாகின்ஸ்" நம்ம கிளாஸ்க்கு புது அட்மிசனா சார் " என்று நக்கலாக கேட்க , என்னை நூலகத்திற்கு அனுப்பி "ஸ்டீபன் ஹாகின்ஸ்" பற்றி பத்து வரிகள் எழுதிவரச் சொன்னீர்கள். அந்த பத்துவரிகள் என் தலைக்கனத்தை சுக்குநூறாக்கியது. இப்போதும் எனது வாழ்வில் தலைக்கனம் தலைத்தூக்கும் போதெல்லாம் எனது தலையில் தட்டிதணிய வைப்பது "ஸ்டீபன் ஹாகின்ஸ்" என்று ஒற்றைப் பெயர் தான். அதற்கொரு நன்றி.
                                                  "ஆங்கிலம்" கடைகோடியில் வாழும் தமிழ்நாட்டு மாணவர்களின் "சிம்மசொப்பனம்". ஆங்கிலத்தின் மீதுள்ள பயத்தினை போக்க நீங்கள் கையாண்ட யுக்திகள் சிறப்பானவை. பயன்பெற்ற மாணவர்களில் நானும் ஒருவன். நீங்கள் எங்களுக்கு கற்பிக்காத துறையே இல்லை என்பேன். "பெண்டுலத்தின் சூத்திரம் முதல் பெண்களிடம் பேசும் சாத்திரம் வரை அனைத்திலும் எங்களை அத்துப்படியாக்கினீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி .

                                உங்களுக்கு ஏன் அந்த "refill " பேனாக்கள் மீது அப்படி ஒரு வெறுப்பு ?. மை பேனாவை பெரிதும் விரும்புவீர்கள். மாணவர்களையும் அவ்வாறே பின்பற்றுமாறு மிரட்டுவீர்கள். உங்களுக்கு இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் இக்கடிதத்தைக் கூட "refill " பேனாவில் தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மன்னிக்கவும். மைப்பேனா இப்பொழுது உலகத்தில் பெரும்பாலும் காணாமல் போய்விட்டது. நீங்கள் இப்பொழுது எந்த பேனா பயன்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை. யாருக்குத் தெரியும் நீங்களும் மாறியிருக்கலாம். ஆனால் கண்டிப்பாக "refill " பேனா பிடிக்காத காரணத்தை பதில் கடிதத்தில் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.                                                
                                                                 நிற்க!!!!!!!!!             
                              "பதில் " என்றதும் எனக்குள் ஒரு கேள்வி. உங்களுக்காக நான் எழுதும் இக்கடிதத்தை எந்த முகவரிக்கு அனுப்புவது . நீங்கள் தான் இப்பொழுது இவ்வுலகத்தில் உயிருடன் இல்லையே !!!" ஆம் !! இன்று "அன்பு " சாரின் 9 வது நினைவு நாள் . ஒவ்வொரு வருடமும் அவரின் நினைவு நாள் அன்று அவருக்காக எழுதும் கடிதத்தின் 9 வது பிரதி இது.
                          சரியாக 9 வருடம் மற்றும் 3 நாட்களுக்கு முன்பு. அது ஒரு "லெவல் கிராசிங்". நான் தண்டவாளத்திற்கு இந்த பக்கம் நின்றுகொண்டிருந்தேன். "அன்பு சார் ! நீங்களோ எதிர்புறம் நின்று கொண்டிருந்தீர்கள்.! உங்களைப் பார்த்து பரவசத்தில் கையசைத்தேன் . நீங்கள் புன்னகைத்தீர்கள். ரயில் கடந்து சென்றபிறகு உங்களின் அருகில் வந்தேன்."என்னடே ! எப்படி இருக்கிற இன்ஜினியரிங் படிக்கிறே !! எப்படி போய்ட்ருக்கு " என்றீர்கள் ." நல்லா போகுது சார் ! கிளாஸ்ல பசங்க, பொண்ணுங்க எல்லாம் செமையா படிக்கிறாங்க சார் ! கொஞ்சம் பயமா தான் இருக்கு " என்றேன். " இதுக்கு போய் பயப்படலாமாடே ? if you cant , who can !!! வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில உண்டுடே !! தைரியமா இரு !! வரட்டா?" என்று வல்லமை பொருந்திய வார்த்தைகளை என்னுள் விதைத்து விட்டு சென்றீர்கள். அவை தான் நீங்கள் என்னிடம் பேசும் கடைசி வார்த்தைகள் என்பதை நான் அறிந்திருக்கவில்லை.
                                         அன்றிலிருந்து மூன்றாவதுநாள். காலையில் தூங்கிக் கொண்டிருந்த என்னிடம் செய்தித் தாளில் வந்த ஒரு செய்தியினை காண்பித்தார் என் தந்தை. "டி வி டி மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் குடும்பத்துடன் தற்கொலை" அச்செய்தியை பார்த்த எனக்கோ பேரதிர்ச்சி. என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை. நண்பன் ஒருவனை அழைத்துக்கொண்டு உங்கள் வீட்டை நோக்கி ஓடினேன். கூட்டம் அதிகமாய் இருந்தது . காவலர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். உங்கள் வீட்டிற்கு அருகே வர என்னுள் அச்சம் அதிகரித்தது. என்றாலும் அருகில் வந்து நீங்கள் உலாவிய இடத்தினை மதில் சுவர் வழியாக எட்டி எட்டிப் பார்த்தேன். விழியில் என்னை அறியாமல் கண்ணீர் ததும்பியது. மூன்று நாட்களுக்கு முன்பு எனக்கு கூறிய கடைசி வார்த்தைகளை நீங்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்திருந்தால் இவ்வாறு செய்திருக்கமாட்டீர்கள். நடந்து விட்டது. முடித்துவிட்டீர்கள். தற்கொலைக்கு பலர் பலவாறாக காரணங்களை கூறினார்கள். கடன் தொல்லை , தொழில் நஷ்டம் , இன்னும் சொல்லவே நாக்கூசுகின்ற சில என்று அவரவர் கற்பனைகேட்டிய காரணங்கள். இவை அனைத்தையும் எனது காதுகள் கேட்டுக்கொண்டிருந்தாலும் , மனதில் நீங்கள் இயற்பியல் வகுப்பு நடத்திக்கொண்டிருப்பதைப் போன்ற பிரமை. அருகில் இருந்த உங்கள் வீட்டின் பெயர் பலகையைப் பார்க்க "நிம்மதி இல்லம் " என்று பொறிக்கப்பட்டிருந்தது. கீழே "Mr .அன்பு MSc M Ed " IN - - OUT என்ற டப்பாவில் "OUT " என்று காட்டியது. சோகத்தோடு வீடு திரும்பினேன். இன்றும் வாழ்வில் நான் பின்பற்றும் விஷயங்கள் பெரும்பாலும் நீங்கள் கற்பித்தவை. கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையில் சொன்னதுபோல் "எனது கனவுகளில் வரும் ஒரே ஆண்மகன் நீங்கள் தான் அன்பு சார் !!" நீங்கள் செல்லும்போது "கிருத்திகா , கார்த்திகா " என்ற அழகிய இரண்டு மொட்டுகளையும் உங்களுடன் அழைத்துசென்றுவிட்டீர்களே!!! வருந்துகிறேன் மீண்டும். நீங்கள் என் போன்ற மாணவர்களுக்காக அளித்த அறிவு அமுதத்திற்கு நன்றி !! நீங்கள் என் போன்ற மாணவர்களின் உணர்வுகளில் ஒன்றிவிட்டீர்கள். உங்களின் நினைவாக என்னிடம் இருப்பது 12 ம் வகுப்பு இயற்பியல் ரெகார்ட் நோட்டும், இந்த புகைப்படமும் மற்றும் நீங்கள் கற்பித்தவைகளும்.

Pravin in XII Standard
அன்பு சார் - முதல் வரிசையில் பிங்க் நிறசட்டை அணிந்திருப்பவர்.

உங்களின் இழப்பு எனது மனதில் நீங்காத வடுவாய் நிலைத்து விட்டது. உங்களை மீண்டும் வணங்குகிறேன்.

இப்படிக்கு,
உங்களிடம் துடுபினைப் பெற்று வாழ்க்கைக் கடலினைக் கடக்கப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு இயற்பியல் மாணவன்.
Download As PDF

Monday, March 8, 2010

தெய்வக்குற்றம்

இடம் :- பெங்களூர்
நேரம் :- நள்ளிரவு 2 மணி.
கிழமை :- வெள்ளி

எங்கோ "கியாங் கியாங் " என்று அலறிய ஒரு குழந்தையின் குரல் என்னை அதிர்ச்சியோடு எழுப்பியது. எழுந்து சுற்றும் முற்றும் பார்க்க , ஒரே கும் இருட்டு. அக்குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்க சிறிது தூக்க கலக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வர , அக்குரல் ஒரு பூனையுடையது என்பதை எனது மூளை உரைக்க அமைதியாக மீண்டும் படுத்துக்கொண்டேன்.அருகில் இருந்த கைபேசியில் நேரத்தை நோக்க அது தனது விரலை "இரண்டு" என்று காட்டியது. எதிரே இருந்த ஜன்னலின் சிறு துவாரத்தின் வழியாக தெரு விளக்கின் கூரிய ஒளி என் கண்ணைத் தாக்கியது. அவ்வொளி என் மனதிற்குள் ஊடுருவி என் எண்ணங்களை நாகர்கோவிலில் ஒரு தெரு விளக்கின் கீழே கொண்டு சென்றது. தெரு விளக்கும் , அவ்வெளிச்சமும் எனது வாழ்வில் சில மறக்கமுடியாத மற்றும் மறக்கநினைகின்ற தருணங்களில் ஆதாரமாய் விளங்குகின்றது. அன்றொரு இரவிலும் வாழ்வின் ஒரு மறக்க நினைக்கின்ற சம்பவம் நிகழ்ந்தது
இரவு மணி 11 . நானும், நண்பன் ரங்குவும் அவனது வீட்டின் எதிரே இருக்கும் தெருவிளக்கின் அடியில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தோம் . 10 ம் வகுப்பு தமிழ் தேர்வுக்குத் ஆயத்தம் ஆகிக்கொண்டிருந்தோம். தீடீரென்று ரங்கு "கலகல" வென சிரித்தான். நானோ அரைத் தூக்கத்தில் சுவரில் முட்டி முட்டி படித்துக்கொண்டிருந்தேன். அவனது சிரிப்பு என்னை உலுக்க அவனிடம் "லேய் ! என்னடே சிரிக்க?" என்றேன். "அது ஒண்ணுமில்ல இங்க புக்ல ஒண்ணு போட்ருக்கு" என்றான். "சிரிகிறதுக்கு தக்கன என்னடே இருக்கு" என்றேன். "அம்பேத்கர் சின்ன வயசுல தெரு விளக்குக்கு கீழ இருந்துதான் படிச்சாராம்." என்று சொல்லு மீண்டும் சிரித்தான். இதுல சிரிகிறதுக்கு ஒண்ணும் இல்லையே? " என்றேன். "அவரு தெருவிளக்கில இருந்து படிச்சாருன்கிற விஷயத்தையே நாம தெருவிளக்குக்கு கீழே இருந்து தான் படிச்சுகிட்டு இருக்கோம்" என்று கூற எனக்கும் பலமாக சிரிப்பு வந்தது. " அப்போ ! நம்மளும் ஒரு நாள் அம்பேத்கர் மாதிரி பெரிய ஆளா வருவோம்கிற " என்றேன். சிறிது உரையாடலுக்குப்பின் மீண்டும் படிக்கத் தொடங்கினோம். நான் எனது அரைத்தூக்கத்தோடு புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். எனக்கு ரங்கு சொன்ன கூற்று மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. "நாமளும் தெருவிளக்குல படிக்கிறோம் ! அம்பேத்கரும் தெருவிளக்குல படிச்சார்!" என்னை ஒரு எண்ணம் உந்தித் தள்ளி உலுக்கியது. "வருடங்கள் மட்டுமே முன்னேறி இருக்கின்றன ! மக்களின் வாழ்க்கைத் தரம் தேங்கி பின்தங்கி இருக்கிறது இன்றும் !". எவ்வளவு பெரிய கருத்தினை விளையாட்டாக சொல்லிவிட்டான் ரங்கு" என்று எண்ணிக் கொண்டிருக்கையில் எனது அரைத்தூக்கம் ஆவியாய் பறந்தது. வினாடி முள் வேகமாக ஓடியது. வீட்டின் முதல் மாடியில் இருந்து ஒரு keyboard கதறும் ஒலி ஒலித்தது. தெருவே அமைதியாக இருந்ததால் keyboard இன் ஒவ்வொரு ஒலியும் துல்லியமாய்க் கேட்டது. உடனே ரங்கு " லேய் ! மதியக்கா ! அவங்க கச்சேரியை ஆரம்பிச்சிடாங்க இனி தமிழ் படிப்பு தடம்புரளப் போகுது" என்றான். நான் எழுந்து மாடி ஜன்னலைநோக்கி "மதியக்கா ! கொஞ்சம் அடக்கி வாசிங்க ! நாங்க இங்க படிக்கிறோம்ல" என்று கூவினேன். அக்கா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து " அதிகம் கதைக்காம படிங்க ! இன்னும் கொஞ்ச நேரத்துல நிறுத்திடுவன்" என்றார். "நாங்க கதைக்கிறது இருக்கட்டும் உங்க கானத்த பாத்துட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டு கழுதை வந்து கனைக்கப் போகுது " என்று கூற மேலிருந்து keyboard ஒலி மட்டுமே பதிலாய் ஒலித்தது.
"மதியழகி!" ரங்குவின் வீட்டின் அருகே இருக்கும் வீட்டின் மேல் மாடியில் சமீபத்தில் குடி புகுந்திருக்கும் ஒரு இலங்கைத் தமிழர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பழகுவதற்கு மிக இனிமையானவர். அதைவிட அக்காவின் தமிழ் மிகவும் இனிமை . அவர்களை கிண்டல் செய்வதற்காகவே அவரிடம் சென்று அடிக்கடி தமிழில் பேசுவதுண்டு. சிறு குழந்தைகளுக்கு tuition சொல்லிக் கொடுப்பதை வேலையாய் கொண்டவர். இரவு நேரங்களில் keyboard மூலம் பலபேருக்கு இன்ப சித்திரவதைக் கொடுப்பவர்,குறிப்பாக எனக்கும் ரங்குவுக்கும். அவரை கிண்டலாக "புலியக்கா" என்று அழைப்பதுண்டு. அவரிடம் நான் அடிக்கடி கேட்கும் கேள்வி "அக்கா ! நீங்க இலங்கை ஆர்மி சப்போர்ட்டா ? இல்ல LTTE சப்போர்ட்டா ?" என்பது தான். அக்கேள்விக்கு அவர் ஒருமுறைகூட பதில் கூறியதில்லை. சிரித்தவாறே சென்று விடுவார் . அன்றும் அக்கேள்வியை வினவும் சூழ்நிலை வந்தது. பொதுவாக விளையாட்டு வினையாகும் என்பது கூற்று. ஆனால் எனது ஒரு கேள்விக்கணை ஒருவரின் வாழ்வில் விளையாடப்போகிறது என்பதை நான் சற்றும் அறிந்திருக்கவில்லை.
மதியக்கா keyboard வாசித்து முடித்துவிட்டு கீழிறங்கி எங்களை நோக்கி வந்தார். "என்ன ! ரெண்டு பசங்களும் அம்பேத்கர் ஆம்லேட் ன்னு கதைத்துக் கொண்டிருக்கிறீர்கள் " என்றார். " என்னக்கா தூங்கலையா ! மணி 12 " என்றேன். " எனக்கு உறக்கம் வரேல்ல ! நாளைக்கு காலைல tuition இல்ல ! அதனால நல்லா கிடந்து உறங்கலாம். " என்றார். நான் மீண்டும் எனது கிண்டலை ஆரம்பிக்க "அக்கா ! நீங்கள் எப்போ தான் இப்படி torture பண்றத நிறுத்தப்போறீங்க" என்று கேட்டேன். அவர் " வாயை மூடிட்டு படி " என்று செய்கை செய்தார். அவ்வுரையாடல் தொடர்ந்து கொண்டேயிருக்க , எங்கள் தெருவின் ஆஸ்தான இராப்பிச்சைக்காரர் "கஞ்சி" என்பவர் எதிர்வீட்டின் திண்ணையில் அமர்ந்துகொண்டார். அவருக்கு "கஞ்சி" என்று பெயர் வர காரணம் இரண்டு. ஒன்று அவருக்கு பிடித்த உணவு "கஞ்சி" வேறு எதைக்கொடுத்தாலும் வாங்கமாட்டார். இரண்டு "கஞ்சி போட்ட காட்டன் சட்டை போல விறைப்பாக நடப்பார். அன்றைய வருமானத்தை வரவு கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தார்.
"அப்புறம் எப்படிடா பரீட்சைக்கு ஆயத்தமாகுறீங்க ? எவ்வளவு எதிர்பார்க்கலாம் " என்றார் மதியக்கா. " வர்றது தான் வரும்கா" என்றேன். "அக்கா ! நீங்க இலங்கை ஆர்மி சப்போர்ட்டா ? இல்ல LTTE சப்போர்ட்டா ?" என்று கேட்க "டேய் ! உனக்கு என்னடா வேணும் " என்று சிறிது கோபமாக கேட்க ,"இல்லக்கா ! அடிக்கடி அங்க பாம் வெடிக்கும்னு நியூஸ்ல பாத்திருக்கேன். அப்போ ஸ்கூல் அடிக்கடி லீவ் வரும்ல " என்று விளையாடக் கேட்க ," டேய் ! அங்க பலபேர் உயிர் போகுது உனக்கு லீவ் பெருசா தெரியுதா !" என்று கோபப்பட்டார். " சரி ! இப்ப ரோடுல ஒரு ஆம்புலன்ஸ் அலாரம் அடிச்சிகிட்டே வேகமா போகுது ! நீ அத பார்த்த என்ன நினைப்பாய்" என்று கேட்டார். நான் ரங்குவைப் பார்த்து சிறிது குழப்பத்துடன் " கொஞ்சம் பதட்டமா இருக்கும்கா " என்று கூறும் போதே எனது மனக்கண்ணில் அக்காட்சி படர உண்மையில் பதறினேன். " எங்க ஊர்ல எப்பவுமே அப்படிதான் பல ஆம்புலன்ஸ் போய்கிட்டே இருக்கும்" என்று கூறினார். அவர் சொல்ல முயலும் விஷயத்தின் வீரியத்தை உணர்ந்தேன். " இப்ப இந்த தெருவுல இராணுவவண்டியும், பீரங்கியும் போய்கிட்டே இருந்தா நீ என்ன பண்ணுவே ?" என்று தனது இரண்டாம் கேள்வியை மிக வலிமையாய் கேட்டார். "ரொம்ப பயமாயிருக்கும் ! நான் வீட்டவிட்டு வெளியவே வரமாட்டேன்" என்றேன். "இந்த நிலைமை தான் எங்க ஊர்ல எப்பவுமே" என்று கூற அவர் காதுகள் சிவந்து , கண்களில் நீர் ஊறுவதைக் காணமுடித்தது. மேலும் தான் படித்து கொண்டிருந்த பள்ளியில் ஒருமுறை வெடிகுண்டு வீசப்பட்டதை நினைவுகூர்ந்தார். "நான் புலியும் இல்ல இராணுவவும் இல்ல சாதாரண தமிழ் மக்கள் அவளோ தான். அங்க எம்மிட மக்கள் ரொம்ப கஷ்டபடுறார்கள் " என்று கூறி முடிக்கும் தருவாயில் அவரது விரல்கள் நடுங்குவதை கண்டேன். கண்கள் பன்மடங்கு விரிந்தன. பற்களை பலமாக கடித்துக்கொண்டார். கைகளும்,கால்களும் கடுமையாக இழுக்க ஆரம்பித்தது. "காக்கா வலிப்பு (பெயர் காரணம்?) " அவரைக் கடுமையாக ஆட்கொண்டது.
"அக்கா! என்ன ஆச்சு " என்று பதற்றத்துடன் அக்காவின் அருகில் நானும் ரங்குவும் செய்வதறியாது துடிக்கும் கைகளைப் பிடித்துக்கொண்டிருந்தோம். இதனை நிதானமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த கஞ்சி " தம்பி! அந்த இரும்பு பாக்ஸ் எடுத்து கைல குடு " என்றார். நாங்கள் அருகில் இருந்த geometry பாக்ஸ் எடுத்து அவரின் கைகளில் திணித்தோம். மாடியிலிருந்து மதியக்காவின் அம்மா கீழே கேட்ட சத்தத்தைக் கேட்டு ஓடிவந்தார். "எந்த தெய்வகுத்தமோ ? என்ற பிள்ளை இப்படி கஷ்டபடுதே என்று அலறிக் கொண்டே மதியக்காவின் அருகில் அமர்ந்து அவருடைய கடிக்கும் பற்களின் நடுவில் விரல்களை திணித்தார். இவ்வாறு செய்ததால் அவருடைய பற்களால் ஏற்படவிருந்த வாய்க்காயம் தடுக்கப்பட்டது.. மெதுவாக அக்காவின் வலிப்பு நிற்க ஆரம்பித்தது. அவருக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. நிதானத்திற்கு வந்து மெதுவாக எழுந்து வீட்டிற்கு சென்றார். நானும்,ரங்குவும் அதிர்ச்சியில் உறைந்தோம். "என்னல ! இப்படி ஆயுடுச்சி " என்றேன். ரங்கு ஒன்றும் சொல்லாமல் அமைதிகாத்தான்.
மறுநாள் மதியக்காவுடன் பேசியபோதுதான் விஷயம் தெரிந்தது. எப்போதெல்லாம் அவருடைய ஊர்பற்றிய பேச்சி வரம்புமீறி போகிறதோ , அப்போதெல்லாம் அவருக்கு இவ்வாறு ஏற்படுமாம். அதனால்தான் பெரும்பாலும் அப்பேச்சினை தவிர்க்கமுயல்வார் என்பதும் தெரியவந்தது. தற்போது செய்திகளில் வரும் இலங்கைத் தமிழர்கள் குறித்த செய்திகளைக் காணும்போது அவர்களின் நிஜநிலையை அறியமுடிகிறது . மதியக்கா கேட்ட அந்த இரண்டு கேள்வியின் ஆழம் இன்று விளங்குகிறது. தற்போது மதியக்கா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாய் வேலைபார்த்துவருகிறார் மேலும் தெய்வம் செய்த குற்றத்திற்காக இன்றும் முதிர்கன்னியாய் வாழ்கிறார் மதியக்கா.
தலையணை அருகே இருந்த கைபேசி அதிர "மணி காலை 8 :30 !". இரவு அந்த நினைவுகளுக்குப்பின் என்னை அறியாமல் தூங்கிவிட்டேன். எழுந்து பார்க்கையில் எனது கண்களில் வழிந்தோடிய கண்ணீரின் தடம் தெரிந்தது. அதன் உண்மையான அர்த்தம் புரிந்தவனாய், வேறேதும் செய்ய இயலாதவனாய் , அமைதியாய் அலுவலகத்திற்கு ஆயத்தமானேன் .

பி.கு : "கால் கை வலிப்பு " என்பது மருவி கருகி "காக்கா வலிப்பு" என்று ஆகிவிட்டது Download As PDF

Sunday, February 7, 2010

களவும் கற்று மற

இடம் :- நாகர்கோயில்
நேரம் :- மாலை 06 :35
கிழமை : வெள்ளி

"மக்கா முத்து! நாளைக்கு சாயுங்காலம் கிரிக்கெட் விளையாடுவோம்ல ! ஏற்கனவே 4 பேர் விளையாட்டுக்கு ரெடி . பேட் இருக்கு ! பால் இனி தான் வாங்கணும் . பைசா வேற இல்ல " என்றேன். நாங்கள் இருவரும் டியுசன் முடிந்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்தோம். "பைசாவா ? எதுக்கு மக்கா ? தேவை இல்ல. வழக்கம் போல " என்று கூறி கண்ணடித்தான். நான் அவனைப் பார்த்து சிறிது அதிர்ச்சியுடன் சிரித்தேன். "டேய் ! ஆனா எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு " என்றேன்." பயமா ? ஏம்ல நீ சின்ன பையனா பயபடுறதுக்கு நாம இப்ப 7ம் கிளாஸ் !" என்று காலரை தூக்கிவிட்டான். "களவும் கற்று மற" தமிழ் புக்ல படிச்சிருகோம்ல என்று தமிழையும் இந்த திருட்டுக்கு கூட்டு சேர்த்தான். "தமிழ் புக்ல சொல்லிருக்கு ! வேறு வார்த்தையே கிடையாது " என்று மனதில் நினைத்துக்கொண்டு "சரி" என்று எனது சம்மதத்தை தெரிவித்தேன். எதிரில் ரங்கு என்ற ரங்கசாமியும் , கார்த்தியும் வந்தார்கள். கார்த்திக்கு இந்த திட்டம் பற்றி முன்னரே தெரிந்திருகிறது . அதனால் முத்துவைப் பார்த்து "போலாமா திருவிளையாடலுக்கு " என்றான் . ரங்கு ஏதும் அறியாதவனாய் "எங்க மக்கா போறோம் " என்றான். முத்துவும் ,கார்த்தியும் சிரித்தனர். நான் ரங்குவிடம் திட்டத்தைக்கூற அதிர்ந்தான்." மக்கா ! அதெல்லாம் தப்புலா ! எங்க அம்மா சொல்லிருக்கு " என்று பின்வாங்கினான். நான் அவனை தனியாக அழைத்துச் சென்று மீண்டும் தமிழை ஆயுதமாக்கினேன். ஆனால் "களவும் கற்று மற" அவனை திருப்திபடுத்தவில்லை . இவனை வேறு விதமாய் அணுகவேண்டும் என்று எண்ணிக் கொண்டு " லேய் ! நீ என்ன சின்ன பப்பாவா ? பயந்தோனி பக்கடா !! பருப்பு சட்டிய நக்குடா !" என்று கிண்டலடிக்க அவனது கழுத்து நரம்புகள் புடைத்தன. " போலே ! நான் ஒண்ணும் சின்ன பையன் இல்ல !! பயபடுற ஆள் இல்ல பாயுற ஆள் " என்று போன சனிக்கிழமை பார்த்த "பாயும் புலி " படத்தின் பஞ்ச் ஒன்றை எடுத்துவிட்டு திருட்டில் இணைத்துக்கொண்டான் அரைமனதாக. முத்து, கார்த்தி,நான்,ரங்கு(1/2 மனதாக), திட்டத்தை செயல்படுத்த சென்றோம் முஹம்மது யூசுப் கடைக்கு.
முத்துவும்,கார்த்தியும் திருடுவதில் சிறிது தேர்ந்தவர்கள். நான் இரண்டாம் ரகம். அதிக பயம் கொஞ்சம் தைரியம். ரங்குவிற்கு இதுவே முதல்அனுபவம். கடைக்குச் செல்லும் வழியில் திட்டத்தை சிறிது விவரமாக விளக்கினான் முத்து. "டேய் !! ரொம்ப நேரம் கடைக்குள்ள இருக்கக் கூடாது. எல்லோரும் சேர்த்து போக கூடாது . நீ எடுக்க வேண்டியது எடுத்துட்டு வெளியே போய்டணும். முக்கியமான விஷயம் யாராவது மாட்டினா யாரையும் காட்டிக் கொடுக்கக் கூடாது . முடிச்சிட்டு எல்லாரும் சவேரியார் கோவில் பக்கத்தில இருக்கிற குமார் பரோட்டா கடைக்கு வந்துருங்க , என்கிட்ட 10 ரூபா இருக்கு , பரோட்டா சாப்டுட்டு போலாம் " என்றான். யூசுப் கடையும் வந்தது. ரங்கு சிறிது நடுங்கினான். இம்முறை பந்தை திருட வேண்டியது என் பொறுப்பு. அதைத் தவிர அவனவன் திருடும் பொருள் அவனவனுக்கு சொந்தம் என்பது திட்டத்தின் சிறப்பு அம்சம். முதலில் முத்து உள்ளே நுழைந்து படிக்கும் பையனைப் போல் பென்சில் , பேனா பிரிவிற்குச் சென்று துலாவிக் கொண்டிருந்தான் . அவனுடைய அன்றைய இலக்கு ஒரு "Geometry பாக்ஸ்" . இரண்டாவதாக நான் நேராக விளையாட்டுப் பொருள்களின் பிரிவிற்குச் சென்று பந்துகள் இருக்கும் பக்கெட் அருகே நின்றுகொண்டிருந்தேன். கடையில் வேலை செய்யும் பையன் " என்னனே வேணும் ?" என்றான். "பந்து வேணும் " என்றேன். "ரப்பர் பாலா ? டென்னிஸ் பாலா ? " என்றான் . " ரப்பர்" என்றேன். அவன் பந்துகள் இருக்கும் பக்கெட்டை காட்டி "பாருங்க , எது வேணும்னு சொல்லுங்க" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றான். அவன் செல்வதை கண்களால் பின்தொடர்ந்தேன். திடீரென்று கண்ணில் பட்டது "இறகு பந்து". கண்கள் விரிந்தன. எனது நினைவுகளில் ரம்யமாக தோன்றினாள் "ரம்யா".
ரம்யா எனது எதிர்வீட்டு பெண். சிறுவயது தோழி. சமீபத்தில் அவளுக்கும், எனக்குமிடையே நடந்த "இறகு பந்து" போட்டியில் நான் தோற்கடிக்கப் பட்டேன். தோல்வியை ஒத்துக் கொள்ளமுடியாமல் கோபத்தில் அவளுடைய இறகு பந்தினை சாக்கடையில் தூக்கி வீசி ,அதைக் கண்டு அவள் அழுவதைப் பார்த்து ரசித்தேன். அன்றிலிருந்து அவள் என்னுடன் பேசுவதில்லை. இறகு பந்தினால் உதிர்ந்த நட்பினை இறகு பந்தின் மூலமாகவே ஒட்டவைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ரப்பர் பந்தினை மறந்து இறகு பந்திற்கு அருகே சென்றேன். முத்து எனது நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு கொண்டிருந்தான். கன நேரத்தில் இறகு பந்தினை எடுத்து trouserல் சொருகினேன். முத்து கோபமாக என்னைப் பார்த்து ரப்பர் பந்தின் அருகில் செல்லுமாறு கண் ஜாடை செய்தான் . நான் ரம்யாவுடன் ஏற்படப் போகும் நட்பினை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தேன். அந்த மகிழ்ச்சியில் பந்து திருடுவது ஒன்றும் பெரிய கடினமான காரியமாக தெரியவில்லை. சுலபமாக எடுத்து வலப்பையில் சொருகினேன். மூன்று பேரும் என்னையே நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். நான் பந்து எடுத்ததை உறுதி செய்தவுடன் முத்துவும், கார்த்தியும் கண் ஜாடை செய்துவிட்டு கடையை விட்டு வெளியே சென்றனர். ரங்கு மிகுந்த பதற்றத்துடன் எனது அருகில் வந்தான் ." லேய் ! எனக்கு செம பயமா இருக்கு . இதெல்லாம் தப்புலே!" என்று போதனை செய்தான். " லேய் ! முடிஞ்சா நீயும் எதாவது எடு ! இல்ல பொத்திகிட்டு பின்னாலயே வா " என்று கோபமாக கூறினேன். கடைப்பையன் மீண்டும் என்னிடம் வந்து " என்னனே பந்து வேணாமா ? " என்றான். " இல்ல தம்பி ! பந்து quality சரி இல்ல , ஒரு அடி போட்ட பொக்குனு போயிரும் போல இருக்கு ! வேண்டாம்பா " என்று இரண்டு பைகளிலும் கையையை விட்டுக்கொண்டு கடையை விட்டு வெளியேறினேன் . அதுவரை அமைதியாக இருந்த ரங்கு சிறிது கோபங்கொண்டான். கடையின் வாசலை நான் கடக்கும் போது ரங்கு ஓடி வந்து "என்னையா பொத்திகிட்டு வர சொல்றே ?" என்று கோபமாக எனது இடது கையை இழுக்க ,பையில் இருந்து கை வெளியே வர , கையில் இருந்து இறகு பந்து வெளியே வந்து பறந்து கீழே விழ , முதலாளி பார்த்து விட ," அடி திருட்டு நாய்ங்களா !" என்று கர்ஜித்து கொண்டே வெளியே ஓடி வந்தார். அடுத்த கணம் நானும்,ரங்குவும் தலைதெறிக்க ஓடி ஆரம்பித்தோம்.
தூரத்திலிருந்து எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த முத்துவும்,கார்த்தியும் ஓட்டம் பிடித்தனர். ரங்குவின் இச்செயல் பெருங்கோபத்தை உண்டாக்கியது. இருவரும் முறைத்துக்கொண்டே ஓடினோம். இறுதியில் இருவரும் குமார் பரோட்டா கடையை அடைந்தோம். முத்துவும், கார்த்தியும் எங்களின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர். நாய் போல மூச்சி வாங்கிக் கொண்டு அவர்களின் முன் நின்றோம். "பந்து எங்க ?" என்றான் முத்து. " அடபாவி கொஞ்சம்ன மாட்டிருப்போம் தெரியும்ல ! எல்லாம் இந்த குரங்கு பயலால வந்தது. இறகு பந்த தட்டிவிட்டுடான் " என்று ரங்குவை குற்றம் சாட்டினேன். முத்து சிறிதும் லட்சியம் செய்யாமல் "பந்து இருக்குல்ல அது போதும் . வாங்க பரோட்டா சாப்டலாம் " என்றான். மாடிப்படியேறி சென்றோம் . செல்லும் வழியில் " லேய் மக்கா ! சாரி டே! தெரியாம பண்ணிட்டேன். கொஞ்சம்ன மாட்டிருப்போம் " என்று மன்னிப்பு கேட்டான். " அதுதான் நடக்கலலாடே விடு " என்றேன். ஆளுக்கு இரண்டு பரோட்டா வாங்கி நன்றாக பிய்த்து போட்டு சால்னாவில் பரோட்டாவை மிதக்கவிட்டு சாப்பிட ஆரம்பித்தோம். எனக்குள் பலவாறாக எண்ணம் தோன்றியது. செய்வது சரியா? தவறா ? " என்ற கேள்வி. அருகில் இருந்த ரங்கு " என்னடா ரொம்ப யோசிக்கிற ? அடி வாங்கிருந்த எப்படி இருக்கும்னு யோசிக்கிறாயா? " என்றான். " அட போலே ! யூசுப் கிட்ட மாட்டி அடி வாங்கினா கூட பரவாயில்ல . ரம்யாவுக்காக கஷ்டப்பட்டு திருடுன பந்து போயிருச்சே !! அது தான் ஒரு மாதிரி இருக்கு " என்றேன். ரங்குவின் காதுகள் சிவந்தன . "மவனே ! உன்ன திருத்தவே முடியாது " என்று மண்டையை தட்டினான். நன்றாக சாப்பிட்டு விட்டு வெளியே வந்தோம். "சரி ! எல்லாரும் நாளைக்கு விளையாட வந்துருங்க " என்று ஆணையிட்டான். "சரி " என்றோம். அப்போது கார்த்தி "கொஞ்சம் பொறுங்கலே " என்று சொல்லிக்கொண்டு தனது பாக்கெட்டில் இருந்து ஒரு கவரினை வெளியே எடுத்தான். "அடப்பாவி " என்றேன். கவரின் உள்ளே இருந்து இரண்டு "பரோட்டாகளை" எடுத்தான். "பரோட்டாவையும் திருடியால நீ " என்றான் ரங்கு. " களவும் கற்று மற மக்கா " என்றான் முத்து . அனைவரும் பலமாக சிரித்தோம். இரண்டு பரோட்டா நான்காக பங்குவைக்கப்பட்டது . அனைவரின் வயிறும் நிரப்பப்பட்டது. வீடு நோக்கிப் பயணப்பட்டோம்.

தற்போதய நிலை :
================
நான் - பெங்களூரில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறேன்.
ரங்கு - Mechanical engineer . இந்தியாவின் தலை சிறந்த கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறான் .
கார்த்தி - புனேயில் கணிபொறி வல்லுனராக பணியாற்றுகிறான்.
முத்து - இந்திய ராணுவத்தில் நாட்டைக் காக்கும் பணியில் உள்ளான்.
ரம்யா - அழகான இரட்டைக் குழந்தைகளின் தாய். தனது கணவருடன் மதுரையில் வாழ்ந்து வருகிறாள்.

பி.கு :களவும் கற்று மற என்பதின் பல்வேறு விளக்கம்

*அறிந்த விளக்கம் :
==================
*திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு
பொருள் உலக வழக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவுகாதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது. தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.

*அறியாத விளக்கம் :
===================
*மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும். இதில்
கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டது.

நன்றி --> http://groups.google.ge/group/piravakam/browse_thread/thread/0ae2202345ee4840 Download As PDF